

திருச்செந்தூர்,
திமுக துணை பொதுச்செயலாளரும் தூத்துக்குடி தொகுதி எம்பியுமான கனிமொழி கருணாநிதி திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அனிதா ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
சட்டமன்ற தேர்தல் நடக்கும் இந்த நேரத்தில் நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை குறித்த மசோதாவை மோடி அரசு தாக்கல் செய்தது. மோடிக்கு இந்த மசோதாவில் தோல்வி தான் கிடைத்தது. தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் இந்த மசோதாவை நம்முடைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்த்து கருப்பு நாள் என்று அறிவித்தார்.
எதிர்கட்சித்தலைவர் நேற்று சேலத்தில் பிரசாரம் செய்த போது அடுத்த ஜென்மத்தில் மனிதனாக பிறக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தால் நான் இந்த தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு குடும்பத்தில் பிறக்க ஆசைப்படுகிறேன் என்று பேசியுள்ளார். எனக்கு அடுத்த ஜென்மத்தில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. அப்படியே அவர் பிறந்தாலும் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டாம். பாஜகவுக்கு கை கட்டி நிற்கும் பழனிசாமி அடுத்த ஜென்மத்தில் குஜராத்தில் பிறந்து கொள்ளட்டும் என கூறினார்.