

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து மதுரை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு அளித்தது. இந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமைக் காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜ், செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில் முத்து ஆகிய 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த ஸ்ரீதருக்கு மரண தண்டனையுடன் ₹84 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. மற்ற போலீசாருக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையுடன் சேர்த்து மொத்தம் ₹1.40 கோடியை இழப்பீடு தொகையாக பென்னிக்சின் தாயார் செல்வராணிக்கு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பை அளித்துள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த போலீஸ் கஸ்டடி மரண வழக்கில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட்டு இருப்பதை பலரும் வரவேற்றுள்ளனர்.
அந்த வகையில் இயக்குனர் அமீர் தனது சமூக வலைத்தளத்தில், நீதி வாழட்டும், நீதி வெல்லட்டும், சாத்தான்குளம் தீர்ப்பு அதிகார மமதையில் மனிதாபிமானமற்று இருக்கும் காவலர்களுக்கு எச்சரிக்கை மணி” என்று பதிவிட்டுள்ளார்.