வீரமங்கை ராணி வேலுநாச்சியார் புகழ் ஓங்குக - நயினார் நாகேந்திரன் புகழாரம்

இன்றைய நாளில், வீரமங்கை வேலுநாச்சியாரின் வீரத்தையும் உயரிய தியாகத்தையும் போற்றி வணங்குவோம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
வீரமும் அறிவும் ஒன்றாய் இணைந்த சிவகங்கை சீமையின் வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்த நாள் இன்று. பெண்களுக்கென சமூகம் விதித்திருந்த கட்டுப்பாடுகளை உடைத்து அடக்குமுறைக்கு எதிராக ஆயுதம் எடுத்த முதல் பெண் விடுதலை வீரர். ஆங்கிலேய ஆதிக்கத்தை ஒழித்துக்கட்ட போர்க்களத்தில் நின்ற அசைக்க முடியாத தைரியத்தின் உறுதியான வரலாற்று ஆவணம் ராணி வேலுநாச்சியாரின் வாழ்க்கை.
தேச விடுதலைக்கு தன் உயிரை ஈந்த வீரமங்கையின் வீரமும் தியாகமும் தலைமுறைகளைத் தாண்டி இன்றும் என்றும் நமக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக திகழும். வீரமங்கை ராணி வேலுநாச்சியார் புகழ் ஓங்குக! இன்றைய நாளில், வீரமங்கை வேலுநாச்சியாரின் வீரத்தையும் உயரிய தியாகத்தையும் போற்றி வணங்குவோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






