மயிலாடுதுறை மதுவிலக்கு டி.எஸ்.பி. சுந்தரேசன் சஸ்பெண்டு


மயிலாடுதுறை மதுவிலக்கு டி.எஸ்.பி. சுந்தரேசன் சஸ்பெண்டு
x

மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

மயிலாடுதுறை மதுவிலக்கு அமல்பிரிவு துணை டி.எஸ்.பி. சுந்தரேசன். இவருடைய அலுவலக வாகனம் பறிக்கப்பட்டு விட்டதாக தகவல் பரவியது. மேலும் இவர் தனது வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு நடந்து சென்றதாக வீடியோவும் ஊடகங்களில் வெளியானது. இதுகுறித்து விளக்கம் அளித்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின், மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி. சுந்தரேசனிடம் அலுவல் பணி காரணமாக பெறப்பட்ட வாகனத்தை திரும்ப ஒப்படைத்து விட்டதாக தெரிவித்திருந்தார்.

கூடுதல் டி.ஜி.பி.டேவிட்சன் தேவாசீர்வாதம், உளவுத்துறை ஐ.ஜி.செந்தில்வேலன் ஆகிய உயர் அதிகாரிகளின் காழ்ப்புணர்ச்சி காரணமாக தனக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அழுத்தம் தருவதாகவும், அலுவலக வாகனத்தை பறித்து மனரீதியாக சித்ரவதை செய்வதாக துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரேசன் குற்றம் சாட்டி பேட்டி அளித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக தஞ்சை மண்டல டி.ஐ.ஜி. ஜியாவுல் ஹக் நேற்று மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். விசாரணையின் முடிவில் டி.எஸ்.பி. சுந்தரேசனை பணியிடை நீக்கம்(சஸ்பெண்டு) செய்ய அவர் திருச்சி சரக ஐ.ஜி.க்கு பரிந்துரை செய்தார்.

இந்த நிலையில், மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி. சுந்தரேசனை பணியிடை நீக்கம் செய்து உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி பேட்டி அளித்ததாக சுந்தரேசன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று காலை மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் டி.எஸ்.பி. சுந்தரேசன் கூறியதாவது:-

நான் உயர் அதிகாரிகள் மீது புகார் கூறியதால், தற்போது என் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். நான் தவறு செய்து இருந்தால், அப்போதே என்னை பணியிடை நீக்கம் செய்திருக்க வேண்டும். ஒருவரை பிடிக்கவில்லை என்றால் கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றமாக உள்ளது.

என் மீது பாலியல் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை சொல்கிறார்கள். ஆனால், அதற்காக தற்போது வரை ஏன் என்னை பணியிடை நீக்கம் செய்யவில்லை. என்னை விசாரிக்காமல் பணியிடை நீக்கம் செய்ய டிஐஜி எப்படி பரிந்துரைக்க முடியும்?. எனக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலையை பார்த்து எனது தந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரை பார்க்கச் செல்வதற்காக மாவட்ட எஸ்.பி.யிடம் அனுமதி கேட்டும் இதுவரை பதில் இல்லை. நான் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளேன். எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். சிலரின் சுயநலத்தால்தான் என்னைப் போன்ற அதிகாரிகள் பாதிக்கப்படுகின்றனர். தற்போது நான் பேசுவதால் என்ன விளைவுகள் வரும் என்று எனக்கு தெரியும். என் மீது தவறு இருந்தால் தூக்கில் போடலாம்

டிஜிபி சங்கர் ஜிவால் நல்ல அதிகாரி. ஆனால், அவர் தற்போது வரை இந்த விவகாரத்தை விசாரிக்கவில்லை. தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த விவகாரத்தில் தலையிட்டு விசாரிக்க வேண்டும். தமிழக முதல்-அமைச்சரும் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story