மயிலாடுதுறை எம்.பி. சுதாவிடம் இருந்து 4.5 சவரன் நகை பறிப்பு

நாடாளுமன்ற உறுப்பினரிடமே மர்ம நபர் நகை பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மயிலாடுதுறை எம்.பி. சுதாவிடம் இருந்து 4.5 சவரன் நகை பறிப்பு
Published on

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மயிலாடுதுறை எம்.பி. சுதா. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21-ந்தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில், தற்போது இவர் டெல்லியில் உள்ளார். இந்த நிலையில், இன்று நாடாளுமன்ற குடியிருப்பு அருகே சுதா நடைபயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களில் ஒருவர், சுதா அணிந்திருந்த தங்க செயினை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர், மர்ம நபரிடம் இருந்து செயினை காத்துக்கொள்ள போராடியும் சுதாவால் முடியவில்லை. அவர் சுதாவை தாக்கிவிட்டு அவர் அணிந்திருந்த 4.5 சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். இதில் சுதாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இது தொடர்பாக சாணக்யபுரி காவல் நிலையத்தில் சுதா புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினரிடமே மர்ம நபர்கள் நகை பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் தற்போது அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.  

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com