துரைப்பாக்கத்தில் பணத்தகராறில் இறைச்சி வியாபாரி கொலை; நண்பர் கைது

பணத்தகராறில் இறைச்சி வியாபாரியை அடித்துக்கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர்.
துரைப்பாக்கத்தில் பணத்தகராறில் இறைச்சி வியாபாரி கொலை; நண்பர் கைது
Published on

இறைச்சி வியாபாரி

சென்னையை அடுத்த ஒக்கியம் துரைப்பாக்கம் ஈஸ்வரன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் ஏஜேஷ் (வயது 32). இவர், வீட்டின் அருகே கோழி இறைச்சி கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி, தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

ஏஜேஷ், கடந்த வருடம் தனது திருமணத்துக்காக துரைப்பாக்கம் மேட்டு குப்பம் பகுதியை சேர்ந்த நண்பர் ஸ்ரீதர் என்பவரிடம் ரூ.30 ஆயிரம் கடன் வாங்கினார். இதற்கு கடந்த ஒரு வருடமாக வாரந்தோறும் வட்டி பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

அடித்துக்கொலை

கடந்த 17-ந் தேதி ஸ்ரீதரர், ஏஜேஷின் இறைச்சி கடைக்கு சென்று, தான் கடன் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி கேட்டார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஸ்ரீதர், ஏஜேசை கையால் தாக்கி தள்ளினார். இதில் ஏஜேஷ், சுவரில் மோதினார். இதில் அவரது தலையில் பலத்த காயம் அடைந்து மயங்கினார். உடனடியாக அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இது குறித்து ஏஜேஷின் மனைவி கொடுத்த புகாரின்பேரில் துரைப்பாக்கம் போலீசார், கொடுங்காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீதரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி ஏஜேஷ் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை துரைப்பாக்கம் போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவுசெய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com