

சென்னை,
தமிழ்நாட்டில் நிரப்பப்படாமல் உள்ள 152 உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு செல்வதை தடுக்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய்க்கு எதிர்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் அந்த கடிதத்தில் இருந்த உதயநிதியின் தகவல் உண்மைக்கு மாறானது என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் அருண்ராஜ் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
உயர் சிறப்பு ( Super speciality) மருத்துவ இடங்களை பொறுத்த மட்டில், தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 422 இடங்களில், 219 இடங்கள் நம் மாநில மருத்துவர்களுக்கும் (state quota) மீதமுள்ள இடங்கள் All India Quota விற்கும் ஒதுக்கப்பட்டதாகும்.
கடந்த ஆண்டுகளில் கலந்தாய்வு முடிந்தபின் state quota வில் நம் அரசு மருத்துவர்கள் கொண்டு நிரம்ப முடியாத இடங்கள் அனைத்தும் All India Quota விற்கு சரண்டர் செய்யப்பட்டது என்பதை எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவாரா? நாம் சரண்டர் செய்த பிறகு, குறைந்தபட்ச சதவீதத்தை ( cut off) குறைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் நமக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் "All India merit list" மூலம் நிரப்பப்பட்டதனால் தமிழ்நாட்டு அரசு மருத்துவர்கள் பெரிதும் பாதிப்படைந்தனர் என்பதையும் அவர் அறிவாரா? 2024-ல், 119 இடங்களும், 2025-ல் 145 இடங்களும் All India Quota விற்கு சரண்டர் செய்யப்பட்டன என்பது வரலாறு.
தங்கள் கடிதத்தில் சென்ற 2025 ஆண்டில் நிரப்பப்படாமல் இருந்த 152 இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு செல்வது தடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது உண்மைக்கு புறம்பான செய்தி.
ஆனால் இந்த ஆண்டு, state quota வில் 151 இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தபோதும், முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு அவற்றை சரண்டர் செய்ய மறுத்து, இது தொடர்பான சுப்ரீம்கோர்ட்டு வழக்கில் உரிய முறையில் வாதங்களை முன் வைத்தது.
மத்திய அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் குறைந்தபட்ச சதவீதத்தைக் குறைப்பது பற்றிய முடிவு பின்னர் எடுக்கப்படும் என்ற வாதத்தை வைத்தார். அதனைத் தொடர்ந்து, மாண்பமை சுப்ரீம்கோர்ட்டு தனது 29.05.2026 நாளிட்ட தீர்ப்பில் 151 இடங்களை சரண்டர் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
நம் மாநில தொகுப்பிற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் அனைத்தும் தமிழ்நாட்டு மருத்துவர்கள் மூலம் நிரப்பப்பட வேண்டும் என்பதே முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு. எனவே சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து, நம் மருத்துவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம், மறுசீராய்வு மனுவினை உடனடியாக 4.6.2026 அன்று தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
கிராமப்புற மக்களுக்கும் உயரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதிலும், நம் மாநில உரிமை சார்ந்த இட ஒதுக்கிடு நிலைப்பாட்டிலும் தமிழக வெற்றிக் கழகம் எப்பொழுதும் உறுதியுடனும், துரிதமாகவும் செயல்படும் என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.