கோவை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ மாணவர்கள் 2-வது நாளாக ஆர்ப்பாட்டம்

கோவை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ மாணவர்கள் 2-வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ மாணவர்கள் 2-வது நாளாக ஆர்ப்பாட்டம்
Published on

கோவை,

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட்தேர்வு வழக்கமாக ஜனவரி மாதம் தொடங்கி ஏப்ரல் மாதத்தில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணத்தால் செப்டம்பர் மாதம் தான் நீட் தேர்வு நடைபெற்றது. மேலும் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை முதலாம் ஆண்டு மாணவர்கள் வராததால், ஏற்கனவே 2 மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு பணிச்சுமையும், மன உளைச்சலும் அதிகமாகியுள்ளது.

எனவே முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கையை விரைவாக நடத்த கோரி, நாடு முழுவதும் முதல் மற்றும் 2-ம் ஆண்டு முதுநிலை மருத்துவ மாணவர்கள் புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் நேற்று காலை கோவை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று 2-வது நாளாக புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் போது, மருத்துவ மாணவர்கள் 'குறைத்திடு குறைத்திடு மருத்துவ பணிச் சுமையை குறைத்திடு' என்பது உள்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷமிட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com