

மதுரை,
மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, வரும் செப். 17ஆம் தேதி (வியாழன்) மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ் பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பாபிஷேகம் வரும் 17 ஆம் தேதியன்று மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவைக் காண, லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மாவட்ட நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மதுரை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கும்பாபிஷேகப் பெருவிழாவை முன்னிட்டு, விழா நடைபெறும் நாளான 17.09.2026 (வியாழன்) அன்று மதுரை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. மதுரை மாவட்ட எல்லைக்குட்பட்ட அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இவ்விடுமுறை பொருந்தும். இவ்விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு, 26.09.2026 (சனிக்கிழமை) அன்று மதுரை மாவட்டத்தில் முழு பணி நாளாக செயல்படும்.
இந்த விடுமுறை செலாவணி முறிச் சட்டம், 1881-ன் (Negotiable Instruments Act, 1881) கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், அவசரப் பணிகளைக் கவனிக்கும் வகையில் மாவட்டக் கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் குறைந்தபட்ச பணியாளர்களுடன் இயங்கும்.
கும்பாபிஷேக விழாவினைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வருகை தருவார்கள் என்பதால், பொதுமக்களின் வசதிக்காகவும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காகவும் இந்த உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.