

சென்னை,
மதுரை மாவட்டத்தில் ரூ.49.74 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
அதன்பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
மதுரை சங்ககால நகரமாக இருந்தாலும் நவீன மதுரையாக மாற்றியது திமுக அரசு தான். மதுரையில் உள்ள பல மேம்பாலங்கள் திமுக ஆட்சியில் தான் கட்டப்பட்டன. திமுக ஆட்சிக்காலத்தில் மதுரையில் எண்ணற்ற வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மதுரையில் ரூ.114 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூலகம் அமைய உள்ளது. மதுரை சுப்பிரமணியபுரம் மேம்பாலத்திற்கு, முத்து என பெயர் சூட்டியவர் கருணாநிதி.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் புதிதாக மாபெரும் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கபடும். மதுரையில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடங்களில் புதிதாக மேம்பாலங்கள் அமைக்கப்படும். ரூ.500 கோடி செலவில் மதுரையில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தப்படும். மதுரை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். சிறப்பாக செயல்பட்டு வரும் அரசு அதிகாரிகளுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.