நல்லகண்ணுவை நேரில் சந்திப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ரா.நல்லகண்ணுவின் 101 வது பிறந்த நாள் வரும் 26 ஆம் தேதி வருகிறது.
சென்னை,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ,விடுதலைப் போராட்ட வீரர் தோழர் ரா.நல்லகண்ணுவின் 101 வது பிறந்த நாள் வரும் 26 ஆம் தேதி வருகிறது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் அவரது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.
தோழர் ரா. நல்லகண்ணு சில மாதங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சுமார் இரண்டு மாதங்கள் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் வீடு திரும்பினார். எனினும் மருத்துவர்கள் ஆலோசனை அடிப்படையில், வீட்டிலும் மருத்துவக் கண்காணிப்பில் ஓய்வில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், தோழர் ரா.நல்லகண்ணுவை அவரது குடும்ப உறுப்பினர்கள் தவிர வேறு யாரும் அருகில் சென்று, அவரோடு உரையாட அனுமதிப்பதில்லை என்பதால், அவரது 101 பிறந்த நாளை முன்னிட்டு, தோழர்கள், நண்பர்கள், பொதுமக்கள் அவரை நேரில் சந்திப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இது தான் அவர் குணமடைய உதவும் வாழ்த்தாக அமையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






