கிராம உதவியாளர்களுக்கு அடிப்படை பயிற்சி குறித்து கூட்டம்

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம உதவியாளர்களுக்கு அடிப்படை பயிற்சி குறித்து கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.
கிராம உதவியாளர்களுக்கு அடிப்படை பயிற்சி குறித்து கூட்டம்
Published on

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம உதவியாளர்களுக்கு அடிப்படை பயிற்சி குறித்து கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.

பயிற்சி கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம உதவியாளர்களுக்கான அடிப்படை பயிற்சி குறித்து கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி பேசியதாவது:-

கிராம அமைவிடம், பரப்பும், எல்லையும், வெவ்வேறு வகைப்பாட்டின் பரப்பு எல்லைகள், மக்கள் தொகை, நில உடமைகள், வருவாய்த் தீர்வாயம், சாகுபடி, பயிராய்வு, நிலவரி வசூலித்தல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், பாசன ஆதாரங்கள், ஆயக்கட்டுதாரர்கள், ஒருபோக புஞ்சை, இருபோக புஞ்சை, சந்தன மரங்கள் பராமரித்தல், மச்ச மகசூல், மழை கணக்கு, புராதன சின்னங்கள் போன்றவை குறித்து அறிந்து வைத்திருக்க வேண்டும்.

பொதுமக்களுக்கு வழங்கப்படும் சாதிச்சான்று, வருமானச்சான்று, இருப்பிடச்சான்று, சொத்து மதிப்புச்சான்று, வாரிசு சான்று, ஆதரவற்ற விதவை சான்று, கணவனால் கைவிடப்பட்டோர் சான்று மற்றும் கலப்பு திருமண சான்று தொடர்பாக விசாரணை செய்தல். பிறப்பு, இறப்பு தகவல் தெரிவித்தல், இயற்கை பேரிடர், தீ விபத்து, வெள்ளம், புயல் முதலியவற்றின் போது உடனுக்குடன் மேல் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இயற்கை இன்னல்களால் ஏற்பட்ட சேதம், வெள்ள சேதம் குறித்து அலுவலர்கள் மதிப்பிடும் போது உதவி செய்ய வேண்டும்.

அந்நியர்கள் வருகையை தெரிவிக்க...

குடும்ப அட்டை வழங்குதல், பொது சொத்துக்கள் கண்காணித்தல், நில ஆக்கிரமிப்புகளை தடுப்பது மற்றும் சர்வே கற்களை பராமரிப்பது. கொலை, தற்கொலை, அசாதாரண மரணங்கள் ஆகியவை குறித்து தகவல் கொடுக்க வேண்டும். விசாரணைகளுக்கு உதவி புரிதல், கிராமத்தில் நிகழும் சமூகவிரோத செயல்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். சந்தேகத்திற்கு இடமான அந்நியர்கள் வருகையை தெரிவிக்க வேண்டும். குற்றங்கள் நடந்த உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்.

கள்ளத்தனமாக மணல் எடுப்பது மற்றும் கல் உடைப்புகளை தடுப்பது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம், மனுநீதி நாள் நிகழ்ச்சி நடத்த தாசில்தாருடன் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் முருகேஷ் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, துணை கலெக்டர் (ஓய்வு) முருகன், நேர்முக உதவியாளர் (பொது) வெற்றிவேல், மாவட்ட கலெக்டரின் அலுவலக மேலாளர் (குற்றவியல்) பாலமுருகன், அலுவலக மேலாளர் (பொது) ரவி, நில அளவை பதிவேடுகள் துறை ஆய்வாளர் மோகன்ராஜ் மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com