மேகமலை காப்பகத்தில் லேசர் கருவிகள் மூலம் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் லேசர் கருவிகள் மூலம் புலிகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த கணக்கெடுக்கும் பணி 8 நாட்கள் நடக்கிறது.
மேகமலை காப்பகத்தில் லேசர் கருவிகள் மூலம் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
Published on

ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது. இப்பகுதியை மத்திய அரசு ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் என அறிவித்துள்ளது. இந்த பகுதி இந்தியாவிலேயே மிகவும் அதிக வன விலங்குகள் இருக்கக்கூடிய பள்ளத்தாக்குகள் நிறைந்த வனப்பகுதியாகும். இப்பகுதியில் காட்டு எருமைகள், யானை, மான், சிறுத்தை, புலி, காட்டு பன்றிகள், செந்நாய்கள் போன்ற ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

இந்த பகுதியில் உள்ள புலிகள் எண்ணிக்கை குறித்து வருடம் தோறும் கணக்கெடுக்கும் பணி நடைபெறும் இந்த ஆண்டு புலிகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த கணக்கெடுக்கும் பணியில் 40 பீட்டுகளுக்கு 3 பேர் வீதம் 120 பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

கணக்கெடுப்பு பணியில் வனத்துறையினர், வன ஆர்வலர்கள் ஈடுபட்டு உள்ளனர். இந்தாண்டு கணக்கெடுப்பின்போது புலிகள் குறித்து துல்லியமாக கணக்கெடுக்க ஜி.பி.எஸ். கருவிகள் மற்றும் லேசர் கருவிகள் பயன்படுத்தப்பட உள்ளன என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 8 நாட்கள் நடைபெறும் இந்த கணக்கெடுப்பு முடிந்தவுடன் புலிகள் எண்ணிக்கை குறித்து ஆய்வு வெளியிடப்படும். ஆய்வுக்கு பிறகு தான் ஸ்ரீவில்லிபுத்துர் மேகமலை புலிகள் காப்பக பகுதியில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா அல்லது குறைந்து உள்ளதா என தெரிய வரும் என வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com