

சென்னை,
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகம் எடுக்கும் முயற்சிகளுக்கு தமிழ்நாடு அரசு எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யவில்லை.
இதனால் கே.ஆர்.எஸ். அணை உள்ளிட்ட காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள அணைகள் நிரம்பவில்லை. குடிநீர் தேவைக்கு மட்டுமே நீரை பயன்படுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அணைகளுக்கு நீர்வரத்து இல்லாததால், காவிரியில் தமிழகத்துக்கு தேவையான நீரை திறந்து விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்திலும், 'பாசனத்திற்காக தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது' என கர்நாடக அரசு தெரிவித்துவிட்டது.
இந்த நிலையில், கர்நா டகா - தமிழகம் இடையில் உள்ள நீண்ட கால பிரச்சினையான காவிரி நதி நீர் பங்கீடு பற்றியும்; மேகதாதுவில் அணை கட்டுவது பற்றியும் விவாதிக்க கர்நாடக அரசின் நீர்ப்பாசன துறை அதிகாரிகள், தமிழக அரசின் நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதில், ‘நதிநீர் பங்கீடு, மேகதாது அணை பற்றி பெங்களூரில் வருகிற 3-ம் தேதி, கர்நாடக - தமிழக முதல்-மந்திரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தலாம்' என, அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாகவும் இதற்கு தமிழக அரசிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், மேகதாது அணை விவகராம் தொடர்பாக முதல்-அமைச்சர் விஜய் வருகிற 3-ம் தேதி கர்நாடகம் செல்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வேளாண்துறை அமைச்சர் வினோத் கூறுகையில், “கர்நாடகாவில் 3 -ம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்கிறார். கூட்டத்தில் தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீரை காவிரியில் திறக்க வலியுறுத்தப்படும் மேகதாது அணையை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம், அது நமது உரிமை.
மழை பெய்யவில்லை. அதனால், காவிரியில் தண்ணீர் திறக்கவில்லை என்று கர்நாடகா தரப்பில் சொல்கிறார்கள்; இருந்தாலும், நமது உரிமைக்காக முதல்-அமைச்சர் விஜய் காவிரி தண்ணீரை கேட்டு பெறுவார் என்று கூறினார்.