

சென்னை,
சென்னை, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஏ.ஆர். பிலிம் பேக்டரி உரிமையாளரான ஏ.ராஜேந்திரன் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலில் உறுப்பினராக உள்ளேன். மெரசலாயிட்டேன் என்ற தலைப்பில் படத்தை தயாரித்து வெளியிட முடிவு செய்து கடந்த 2014-ம் ஆண்டு அந்த தலைப்பையும், கதையையும் தயாரிப்பாளர் கவுன்சிலில் பதிவு செய்துள்ளேன். இந்நிலையில் மெர்சல் என்ற தலைப்பில் நடிகர் விஜய் நடிக்கும் படம் வரும் தீபாவளிக்கு திரையிடப்படவுள்ளது. மெர்சல் என்ற தலைப்பு நான் பதிவு செய்துள்ள மெரசலாயிட்டேன் என்ற தலைப்பை ஒத்து உள்ளது. எனவே மெர்சல் என்ற பெயரை பயன்படுத்தி படத்தை வெளியிட தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிட்டெட் நிறுவனத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், மெர்சல், மெர்சலாயிட்டேன் என்ற தலைப்புகள் வெவ்வேறு விதமாக உள்ளன. எனவே, தலைப்புக்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, ஐகோர்ட்டில் ராஜேந்திரன் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீடு வழக்கு நீதிபதி ராஜீவ் ஷக்தேர், நீதிபதி சதீஷ்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் கார்த்திகேயன், தேனாண்டாள் நிறுவனம் சார்பில் வக்கீல் எஸ்.விஜயன் ஆகியோர் வாதிட்டனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.