மேட்டுப்பாளையம்: காட்டு யானை தாக்கியதில் விவசாயி பலி

ராமன் மூத்த சகோதரியை பார்த்துவிட்டு நேற்று மாலை மீண்டும் தனது ஊருக்கு நடந்து வந்துகொண்டிருந்தார்.
மேட்டுப்பாளையம்: காட்டு யானை தாக்கியதில் விவசாயி பலி
விவசாயி பலி
Published on

மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நள்ளிரவில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

விவசாய கூலி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக எல்லைக்குட்பட்ட காலனி புதூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் ராமன். விவசாய கூலி தொழிலாளியான இவர், சீங்குழி கிராமத்தில் உள்ள தனது மூத்த சகோதரியை பார்த்துவிட்டு நேற்று மாலை மீண்டும் தனது ஊருக்கு நடந்து வந்துகொண்டிருந்தார்.

அதிகாலையில் மீட்கப்பட்ட சடலம்

இரவு நீண்ட நேரமாகியும் ராமன் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த உறவினர்களும் கிராம மக்களும் விடிய விடிய காட்டுப் பகுதிக்குள் தேடி சென்றனர். இந்த நிலையில், இன்று அதிகாலை கொடுங்காரப்பள்ளம் புதூர் பகுதியில் உள்ள ஓடையில், ராமன் உடலில் படுகாயங்களுடன் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து வனத்துறைக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

யானை

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் காரமடை போலீசார், உயிரிழந்த ராமனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், இப்பகுதியில் சுற்றி திரியும் ஒற்றை யானை ராமனை தாக்கி மிதித்து கொன்றிருக்கலாம் என்று வனத்துறையினர் பலத்த சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் கோரிக்கை

இதற்கிடையே, காடுகளிலிருந்து குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து உயிர்பலி வாங்கும் காட்டு விலங்குகளின் தாக்குதலில் இருந்து தங்களையும், தங்களது வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com