நடப்பாண்டில் 3-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது


நடப்பாண்டில் 3-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது
x
தினத்தந்தி 20 July 2025 8:01 AM IST (Updated: 20 July 2025 2:50 PM IST)
t-max-icont-min-icon

அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சேலம்,

தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியதால் பாதுகாப்பு கருதி உபரிநீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 18,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதாவது நேற்று காலை அணைக்கு வினாடிக்கு 18,610 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து மாலை வினாடிக்கு 28,784 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து டெல்டா மற்றும் கால்வாய் பாசன தேவைக்காக வினாடிக்கு 18,500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவைவிட நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நேற்று மாலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 119.64 அடியாக இருந்தது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து இதே நிலை நீடித்தால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அணை மீண்டும் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி, நடப்பாண்டில் 3-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் முழு கொள்ளளவான 120 அடியை அணையின் எட்டியுள்ளது. அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 22,500 கன அடியிலிருந்து 31,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணை மற்றும் சுரங்க மின்நிலையங்கள் வழியாக 22,500 கன அடியும், உபரி போக்கி வழியாக 8,500 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது. நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அணைக்கு வரும் நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட வாய்ப்பு உள்ளதாக மேட்டூர் அணை நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. நீர் திறப்பு அதிகரிப்பால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நடப்பாண்டில் 3-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியுள்ளதால் விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

1 More update

Next Story