

மேட்டூர்,
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், கர்நாடக அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து சரிந்து வருகிறது.
மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 4,822 கன அடியாக மேலும் குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு சரிந்துள்ள அதே வேளையில், பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 91.50 அடியாக குறைந்துள்ளது. அணையின் மொத்த நீர் இருப்பு 54.38 டி.எம்.சி.யாக உள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசன தேவைக்காக கடந்த செப்டம்பர் 1-ந் தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன்படி, இன்று காலை நிலவரப்படி டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் வினாடிக்கு 12,000 கன அடி தண்ணீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 400 கன அடி தண்ணீரும் என மொத்தம் 12,400 கன அடி தண்ணீர் அணையில் இருந்து தொடர்ந்து திறந்து விடப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது:-
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாத காரணத்தாலும், கர்நாடக அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய உரிய காவிரி நீரை திறந்து விட மறுப்பதாலும் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,822 கன அடியாக குறைந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.