

மேட்டூர்,
மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் நீர்மட்டம் 78 அடிக்கு கீழே சென்ற போதிலும் கிறிஸ்தவ ஆலய ஒற்றை கோபுரம் தெரியவில்லை. எனவே அந்த கோபுரம் சேதம் அடைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
மேட்டூர் அணை நீர்மட்டம் குறையும் போதெல்லாம், காவிரியின் ஆழத்தில் மறைந்திருக்கும் ஒரு நூற்றாண்டு கால வரலாறு மீண்டும் உயிர்பெற்று வெளியே வருகிறது. 1934-ல் ஸ்டேன்லி நீர்த்தேக்கம் உருவானபோது, சேத்துக்குளி பகுதி உட்பட சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீருக்குள் மூழ்கின.மக்கள் தங்கள் நிலங்களை விட்டு வெளியேறினாலும், அந்த கிராமங்களில் இருந்த வழிபாட்டு தலங்கள் மட்டும் அப்படியே இருந்தன.
அணையின் நீர்மட்டம் கணிசமாக குறையும் கோடை காலங்களில், இரண்டு முக்கிய வழிபாட்டு தலங்கள் தண்ணீரை விட்டு வெளியே தெரிவது வழக்கம். பண்ணவாடி பரிசல் துறை பகுதியில் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில், நந்தி சிலை, சேத்துக்குளி பகுதியில் அமைந்துள்ள தூய லூர்து அன்னை கிறிஸ்தவ ஆலய கோபுரங்கள் வெளியே தெரியும்.
நீருக்கு அடியில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக உறுதியோடு இருந்த அந்த இரட்டை கோபுரங்களில் ஒன்று, கடந்த 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திடீரென இடிந்து நீருக்குள் விழுந்தது. நீரின் அழுத்தம் காரணமாக அது இடிந்ததா அல்லது ஏதேனும் சமூக விரோதிகளின் செயலால் சேதமடைந்ததா என்பது இன்னும் மர்மமாகவே தெரியவில்லை. கடைசியாக 2024-ம் ஆண்டு ஒரு கோபுரம் தெரிந்தது. கடந்த ஆண்டு அணையின் நீர்மட்டம் குறையவே இல்லை. எனவே கோபுரமும் தெரியவில்லை.
இந்த நிலையில் நேற்று அணையின் நீர்மட்டம் 77.43 அடியாக குறைந்த நிலையிலும் கிறிஸ்தவ ஆலயத்தின் ஒற்றை கோபுரம் தெரியவில்லை. எனவே அந்த கோபுரமும் இடிந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 68 அடிக்கு கீழே குறையும் போது நந்தி சிலையை மட்டுமே இனி பொதுமக்கள் கண்டு ரசிக்கலாம் என்று அந்த பகுதி மக்கள் கூறுகிறார்கள்.