102 அடியை தாண்டியது மேட்டூர் அணை நீர்மட்டம் - விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டூர் அணை நீர்மட்டம் 102 அடியை தாண்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். #MetturDam
102 அடியை தாண்டியது மேட்டூர் அணை நீர்மட்டம் - விவசாயிகள் மகிழ்ச்சி
Published on

மேட்டூர்,

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு கர்நாடகாவிலிருந்து வரும் தண்ணீரின் அளவு அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் 102 அடியை தாண்டியுள்ளது.

கர்நாடகாவில் கனமழை காரணமாக, அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி போன்ற அணைகள் நிரம்பியதால் 1 லட்சத்து பத்தாயிரம் கன அடிக்கு மேல் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டிவிட்டது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தற்போது வினாடிக்கு 1 லட்சத்து 7 ஆயிரம் கன அடியாக உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 4 ஆண்டுகளுக்கு பின்னர் 102 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணையை முதலமைச்சர் பழனிசாமி நாளை திறந்து வைக்கிறார். இந்நிலையில் கேஆர்எஸ் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 69 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கபினி அணையில் இருந்து 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடும் நீர் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களுக்கு விவசாயத்திற்காகவும், குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்தும் வருகிறது. காவிரி ஆறு மற்றும் மேட்டூர் அணை ஆகியவை தமிழகத்தில் வளர்ச்சியில் மிக முக்கியப் பங்கு வகித்து வருகிறது. தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் 102 அடியை எட்டியிருப்பது விவசாயிகளை மிகுந்த மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

மேலும் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 107.10 அடியை எட்டியுள்ளது. அதன் நீர் இருப்பு 22.90 டிஎம்சியாக உள்ளது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,000 கன அடியாகவும், நீர் திறப்பு 1,050 கன அடியாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com