மிக்ஜம் புயல்: முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை புயல் நிவாரணத்திற்கு வழங்குவதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
மிக்ஜம் புயல்: முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்
Published on

சென்னை,

மிக்ஜம் புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் புயல் நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் புயல் நிவாரணத்திற்கு நிதி அளித்திடுமாறு முதல்-அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த நிலையில் மிக்ஜம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"மிக்ஜம் புயல் காரணமாக வரலாறு காணாத மழை, வெள்ள பாதிப்புகளால் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் சிறப்பான முறையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம், மக்களின் வாழ்க்கை இயல்புநிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது.

தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபட்டு, படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்களையும் அவர்களின் உடைமைகளையும் பத்திரமாக மீட்டு வருகின்றனர்.

மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒருமாத ஊதியத்தை சிறுபங்களிப்பாக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்கின்றோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு  கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com