2 தனியார் நிறுவனங்களின் பால் விலை மீண்டும் உயர்வு

தனியார் பால் நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்திருந்தாலும், தமிழக அரசின் ‘ஆவின்' நிறுவனம் பால் விலையை உயர்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2 தனியார் நிறுவனங்களின் பால் விலை மீண்டும் உயர்வு
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் விற்பனையாகும் ஆந்திராவை சேர்ந்த டோட்லா, ஹெரிடேஜ், திருமலா, ஜெர்சி உள்ளிட்ட முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் கடந்த டிசம்பர் மாதம் பால் விற்பனை விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியது. இந்த நிலையில் மீண்டும் 2 தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தி உள்ளது.

தனியார் நிறுவனங்களின் இந்த முடிவுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அந்த சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

'திருமலா' பால் நிறுவனம் 1-ந்தேதி (இன்று), 'ஜெர்சி' நிறுவனம் 3-ந்தேதி முதலும் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும், தயிர் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் வரையிலும் உயர்த்துவதாக சுற்றறிக்கை மூலம் தகவல் தெரிவித்து உள்ளது. கொரோனா காலகட்டத்துக்கு முன்பு இருந்த பால் கொள்முதல் விலையை விட தற்போது லிட்டருக்கு 3 ரூபாய் குறைவாகவே அனைத்து தனியார் நிறுவனங்களும் கொள்முதல் விலையாக பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கி வருகின்றன.

எனவே தனியார் பால் நிறுவனங்களை வரன் முறைப்படுத்தி பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை கட்டுப்படுத்த சிறப்பு சட்டம் இயற்றிட மத்திய, மாநில அரசுகளுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தனியார் பால் நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்திருந்தாலும், தமிழக அரசின் 'ஆவின்' நிறுவனம் பால் விலையை உயர்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com