

கோவை,
கோவையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் உறவினர்கள் மீது போதைபொருட்கள் கடத்தல் தொடர்பான புகார்கள் அதிர்ச்சியாக உள்ளன. இதுகுறித்து கடந்த மாதம் 27-ந் தேதி அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் ஜான் பிரிட்டோ, ஜான் கென்னடி ஆகியோர் கோவையை சேர்ந்தவர்கள்.
முதல்-அமைச்சர் விஜய் ஊழலற்ற ஆட்சியை கொடுக்க வேண்டும், மதுபோதை இல்லாத ஆட்சி என்பதை தான் முக்கிய வாக்குறுதியாக கொடுத்துள்ளார். இந்த நிலையில் தற்போதைய குற்றச்சாட்டை சாதாரணமாக எடுத்து கொள்ளக்கூடாது. எனவே, ஆதவ் அர்ஜுனா த.வெ.க. அமைச்சரவையில் இருப்பது முறையா? என்ற கேள்வி எழுகிறது.
இந்த விவகாரத்தில் அவரை அமைச்சர் பதவியில் இருந்து முதல்-அமைச்சர் விஜய் நீக்க வேண்டும். இந்த விஷயத்தில் விஜய் மவுனம் சாதிக்கக்கூடாது. கரூர் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிதி உதவிக்கான பணம் யாருடையது என கண்டுபிடிக்கப்பட வேண்டும். அது ஆதவ் அர்ஜுனா கொடுத்த பணம் என்றால், அவருக்கு அந்த பணம் எங்கிருந்து வந்தது? என்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். மத்திய அரசும் முழுமையாக விசாரிக்க வேண்டும். மேலும் சி.பி.ஐ. விசார ணையும் வேண்டும்.
தமிழ்நாட்டில் தூய ஆட்சி நடக்க வேண்டும் என்றால், ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இருந்தும், அமைச்சரவையில் இருந்தும் நீக்க வேண்டும். லீமா ரோஸ் எம்.எல்.ஏ.வுக்கு ரூ.5 ஆயிரம் கோடி சொத்து எங்கிருந்து வந்தது?. அவரையும் அ.தி.மு.க. நீக்க வேண்டும். இது போன்று உறவினர்கள் மீது குற்றச்சாட்டு வரும் போது ஆதவ் அர்ஜுனா அவராகவே முன்வந்து பதவி விலக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.