

செங்கல்பட்டு,
அமைச்சர் ஆனந்த் ரூ.3.19 கோடி மதிப்பீட்டிலான புனரமைப்புப் பணிகளை செங்கல்பட்டில்தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, இன்று (17.08.2026) திங்கட்கிழமை, வளர்ச்சியடைந்த பாரதம் – கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் (VB-GRAMG) கீழ், தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 10,185 வரத்துக் கால்வாய்கள் மற்றும் 809 ஏரிகள், குளங்கள் மற்றும் ஊரணிகள், ரூ.500 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
மழைநீரை முறையாக சேமித்து, நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிப்பதுடன், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு நீர்வளத்தை பாதுகாக்கவும் இப்புனரமைப்புப் பணிகள் முக்கிய பங்காற்றும்.
இதன் ஒரு பகுதியாக, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியம், நெடுங்குன்றம் ஊராட்சியில் உள்ள புத்தூர் கிராம ஏரி வரத்துக் கால்வாயில் ரூ.3.19 கோடி மதிப்பீட்டிலான புனரமைப்புப் பணிகளை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் நீர்நிலைகளை பாதுகாத்து, நீர்வளத்தை மேம்படுத்தி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்நிகழ்வில் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் டி.சரத்குமார், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம். வீரப்பன், ஐ.ஏ.எஸ்., செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தியாகராஜன், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் விஜயராஜ் , ஊராட்சித் துறை ஆணையர் வி.அமுதவல்லி, ஐ.ஏ.எஸ்.,அவர்கள் மற்றும் துறை சார்ந்த பிற அதிகாரிகள் உடன் இருந்தனர்.