

விருதுநகர்
கண்டிப்பாக ரூ.2,500 மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி அளித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜயின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி கலந்துகொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-
தவெக ஆட்சி என்பது மக்களுக்கான ஆட்சி தவெக ஆட்சியில் ஒரு சதவீதம் கூட ஊழல் இருக்காது. மக்கள் சேவைக்காக பணத்தின் அடிப்படையில் அதிகாரிகள் யாராவது மக்களை அணுகினால் உடனடியாக தகவல் தெரிவியுங்கள்.
தவறு செய்தது உறுதி செய்யப்பட்டால் விசாரணை இன்றி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 100 சதவீதம் ஊழலில்லா ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற முதல்-அமைச்சரின் விருப்பத்தை நிறைவேற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
தற்போது 1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழக்கமாக வழங்கப்பட்டு வருகிறது. 2,500 ரூபாய் மகளிர் உரிமை தொகை உயர்த்தி வழங்கிடுவதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கண்டிப்பாக 2500 ரூபாய் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும். கடந்த ஆட்சியில் விண்ணப்பித்தவர்களுக்கு இதுவரை மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப்பெறவில்லை என ஏராளமான மனுக்கள் வரப்பெற்றுள்ளது.
மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமை தொகை கோரி ஒரே பெயரில் இரண்டு முதல் மூன்று முறை விண்ணப்பிக்கப்பட்டுள்ளது குறித்து உரிய ஆய்வு செய்து சரி செய்யப்படும். தமிழ்நாட்டில் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும். முதலமைச்சர் கூறியது போல் 2500 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை விரைவில் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.