அரசியலில் இல்லாத ரஜினி-கமல் எப்படி இணைவார்கள்? அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

அரசியலில் இல்லாத நடிகர் ரஜினிகாந்த்-கமல்ஹாசன் இருவரும் எப்படி இணைவார்கள்? என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.
அரசியலில் இல்லாத ரஜினி-கமல் எப்படி இணைவார்கள்? அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
Published on

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

வரிகுறைப்பு

போலியான ரசீதுகள் கொடுத்து ஏமாற்றுகின்ற நடவடிக்கையில் வணிக நிறுவனங்கள் ஈடுபட்டால் அது சட்டப்படி குற்றம். இதுபற்றி புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். 292 சரக்குகள், 42 சேவைகள் மீதான வரிகள் குறைக்கப்பட்டு உள்ளன. 24 சரக்குகள், 36 சேவைகள் மீதான வரிகள் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளன.

தமிழக முதல்-அமைச்சர் அறிவுரையின் பேரில் சரக்கு மற்றும் சேவைகளில் வரி குறைப்பு மற்றும் வரி விலக்குகள் அளிக்கப்பட்டு மக்கள், வணிகர்கள் நலன் முழுமையாக காப்பாற்றப்பட்டு உள்ளது. 62 சரக்குகள், 6 சேவைகள் மீதான வரியை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரியினங்களில் சில மாற்றங்களை மத்திய அரசு கொண்டுவர உள்ள நிலையில் மக்கள், வணிகர்கள் பாதிக்கக்கூடிய எந்தவொரு செயலுக்கும் எதிர்ப்பு தெரிவிப்போம்.

எப்படி இணைவார்கள்?

நடிகர் ரஜினிகாந்த் தனது கொள்கை, லட்சியத்தை சொல்லி உள்ளார். அரசியல் என்ற சமுத்திரத்தில் முதலில் அவர் குதிக்கட்டும். அதன் பின்னர் கருத்துகளை சொல்லலாம். அரசியலில் இல்லாத நிலையில் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் எப்படி இணைவார்கள்?. அது ஒரு அனுமானம். அனுமானத்துக்கு பதில் சொல்லமுடியாது.

ரஜினிகாந்துக்கும், அ.தி. மு.க.வுக்கும் சிண்டு முடிக்க வேண்டாம். அவர் தன்னுடைய கருத்தை பொதுவாக சொல்லி உள்ளார். அரசியலுக்கு வராத ரஜினியை எதற்கு வம்புக்கு இழுக்குறீர்கள்?.

மக்கள் செல்வாக்கு பெற்ற, மக்களின் எண்ணங்களை முழுமையாக செயல்படுத்துகின்ற அரசாக தமிழக அரசு உள்ளது. அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய மாபெரும் சக்திகள் எங்களுடன் உள்ளது. அந்த சக்திகளை வைத்து 2021-ம் ஆண்டு தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று தொடர்ந்து ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com