

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று தலைமைச் செயலகத்தில், கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் மரபுவழி மற்றும் நவீன பாணி ஓவியம் மற்றும் சிற்பக் கலைகளில் திறமைமிக்க 6 கலைஞர்களுக்கு 'கலைச் செம்மல்' விருதுகளை வழங்கினார்.
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மரபுவழி, நவீன பாணி ஓவியம் மற்றும் சிற்பக் கலைகளில் திறமைமிக்க கலைஞர்களுக்கு 'கலைச் செம்மல்' விருது வழங்கி ஊக்குவிக்கிறது. விருதாளர்களுக்கு செப்புப் பட்டயம், விருதுத் தொகை ரூ.1 லட்சம் (ரூபாய் ஒரு லட்சம்) மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை வழங்கி அவர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் 6 புகழ்பெற்ற கலைஞர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்த நிகழ்ச்சியில் மரபுவழி ஓவியப் பிரிவில் மா.பாலசுப்ரமணியன், மரபுவழி சிற்ப பிரிவில் தே.ஸ்ரீகண்ட ஸ்தபதி மற்றும் உ.பத்மநாபன், நவீனபாணி ஓவியப் பிரிவில் முனைவர் கோ.வில்வநாதன் மற்றும் மு.ராஜா, நவீனபாணி சிற்ப பிரிவில் ச.சாந்தி ஆகிய 6 பேருக்கு 2025-2026-ம் ஆண்டிற்கான 'கலைச் செம்மல்' விருதுகளை தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
இந்த நிகழ்வின் போது சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் க.மணிவாசன், கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் (மு.கூ.பொ.) ச.வளர்மதி மற்றும் இணை இயக்குநர் ஜெ.கார்குழலி ஆகியோர் உடனிருந்தனர்.