அமைச்சர் பொன்முடியின் பதவிக்கு சிக்கல்.. சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்

அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் பொன்முடியின் பதவிக்கு சிக்கல்.. சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
Published on

சென்னை,

தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது வைணவம் சைவம் தொடர்பாக சர்ச்சை கூறிய கருத்துக்களை தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திமுக எம்பி கனிமொழி இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

இதை எடுத்து திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்கி தமிழ்நாடு முதல் அமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இதனைத்தொடர்ந்து தான் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்டு பொன்முடி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ் அமைச்சர் பதவி வகிக்கும் பொன்முடியை அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ஜகன்நாத் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

பொன்முடி அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ் அமைச்சர் பதவியை வகிப்பவர் அவர் மத ரீதியான கருத்துக்களை தெரிவிக்கும் போது பொதுமக்களின் மனம் புண்படாத வகையில் பேசி இருக்க வேண்டும் ஆனால் மிகவும் அவதூறான கருத்துக்களை அவர் தெரிவித்துள்ளார். அதனால் அமைச்சர் பதவியில் இருந்து அவரை நீக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இந்த வழக்கை அவசர வழக்காக இன்றே விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி ஸ்ரீராம் நீதிபதி முகமது சபிக் ஆகியோர் முன்பு மனுதாரர் ஆஜராகி கோரிக்கை விடுத்தார். ஆனால் இந்த வழக்கை அடுத்த வாரம் விசாரித்து எடுத்துக் கொள்வதாக கூறிய தலைமை நீதிபதி, அமைச்சர் பொன்முடி தான் தெரிவித்த கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்டு உள்ளாரே..? அது மட்டுமல்ல அவரை கட்சியின் பதவியிலிருந்து நீக்கியதாகவும் பத்திரிகை செய்தி வந்துள்ளதே..? என்றும் கேள்வி எழுப்பினார்.

பின்னர் இந்த வழக்கை அடுத்த வாரம் விசாரிப்பதாக நீதிபதி கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com