அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: ஐகோர்ட்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு 3-வது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரை

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் வெவ்வேறு தீர்ப்பை அளித்துள்ளதால், இந்த வழக்கு 3-வது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: ஐகோர்ட்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு 3-வது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரை
Published on

மதுரை,

தமிழக பால்வளத்துறை அமைச்சராக கே.டி.ராஜேந்திர பாலாஜி உள்ளார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் தனது அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் மதுரை தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் கடந்த 2014-ம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், ரூ.7 கோடி அளவுக்கு முறைகேடாக சொத்து சேர்த்துள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, கடந்த 1996-ம் ஆண்டு திருத்தங்கல் பேரூராட்சி துணை தலைவராக ராஜேந்திரபாலாஜி பதவி வகித்தது முதல் அவருடைய சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டது.

மாறுபட்ட தீர்ப்பு

இந்த வழக்கில் நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் நேற்று தீர்ப்பளித்தனர்.

நீதிபதி சத்தியநாராயணன் தனது தீர்ப்பில், ராஜேந்திர பாலாஜி மீதான குற்றச்சாட்டு குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மற்றொரு நீதிபதியான ஹேமலதா தனது தீர்ப்பில், ராஜேந்திர பாலாஜி மீதான குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இல்லை என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு அளித்துள்ளனர்.

3-வது நீதிபதி

எனவே இந்த வழக்கை 3-வது நீதிபதி விசாரிக்க உத்தரவிடுமாறு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com