

சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் இன்று (04-06-2026) மதுரை மாவட்டத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் ஆய்வு
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் த. லோகேஷ் தமிழ்செல்வன் இன்று (04-06-2026) மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், நாகமலைபுதுக்கோட்டை, வாடிப்பட்டி, ஒத்தக்கடை, திருமங்கலம் உள்ளிட்ட சார் பதிவாளர் அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது அலுவலக அடிப்படை வசதிகளை பார்வையிட்டு, பதிவுக்கு வருகை புரிந்த பொதுமக்களிடம் கலந்துரையாடி, பத்திரப்பதிவிற்கு லஞ்சப் பணம் யாராவது கேட்கிறார்களா என்று கேட்டு, அவ்வாறு எதாவது பணம் கேட்டு தொந்தரவு செய்தால் என்னிடம் அல்லது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார்.
மேலும், பணியில் இருந்த அலுவலர்களிடம் அலுவலக பணிகள் குறித்து கேட்டறிந்து, அலுவலக ஆவண பதிவேடுகளை ஆய்வு செய்து, எத்தனை ஆவணங்கள் இன்று பதிவுக்குவந்துள்ளன, எவ்வளவு பதிவுகள் முடிக்கப்பட்டுள்ளன, கடந்த கால பத்திரப்பதிவு செய்த விபரங்கள் அனைத்தும் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்து, நிலுவையில் உள்ள பத்திரங்கள் விவரங்களை கேட்டறிந்தார்.
அதேபோல் பதிவுக்கு வரும் பொது மக்களுக்கு உரிய இருக்கை வசதியை ஏற்படுத்தி, அவர்களுடைய குறைகளை கவனமாக விசாரித்து, லஞ்சம் வாங்குவதை தவிர்த்து, ஆவண பதிவுகளை உடனடியாக முடித்து, அன்றைய தினமே உரிய நபர்களிடம் பத்திரங்களை ஒப்படைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.