

விழுப்புரத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டி நடக்கிறது. இப்போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி தலைமை தாங்கி பேசுகையில், விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள தளபதி திடல் வளாகத்தில் நாளை மறுநாள் மாலை 3.30 மணியளவில் நடைபெறும் மாரத்தான் போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இப்போட்டிகள் பள்ளி, பொதுப்பிரிவினர் மற்றும் மாணவ-மாணவிகள், ஆண்கள், பெண்கள் என 4 பிரிவுகளாக 5 கிலோ மீட்டர் தூரமும், திருநங்கைகள் ஒரு பிரிவாக 3 கிலோமீட்டர் ஓட்டப்போட்டியும் நடத்தப்படவுள்ளது. போட்டிகளில் வெற்றிபெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.1,000-ம் மற்றும் 4 முதல் 10 வரை ரூ.500 வீதம் 5 பிரிவினர்களுக்கும் பரிசளிக்கப்படும். போட்டி தூரத்தை நிறைவு செய்யும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
இப்போட்டியில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள், பொதுப்பிரிவினர்கள், திருநங்கைகள் பெருமளவில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டியும் மற்றும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். போட்டியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது பெயரை எம்.ஜி.ஆர். உள்விளையாட்டரங்கில் பதிவு செய்திடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் நா.புகழேந்தி எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன், முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.