கோவில்களில் காணாமல் போன சிலைகள், நகைகளை கண்டுபிடிக்க வேண்டும் அறநிலையத்துறைக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

கோவில்களில் காணாமல் போன சிலைகள், தங்க, வைர நகைகளை கண்டு பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கோவில்களில் காணாமல் போன சிலைகள், நகைகளை கண்டுபிடிக்க வேண்டும் அறநிலையத்துறைக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் சொத்துகள், நகைகள் குறித்த விவரங்கள் அடங்கிய பதிவேடு காணாமல் போய்விட்டது. கோவில்களில் இருந்த விலை மதிக்க முடியாத சிலைகள், தங்க, வைர நகைகள் காணாமல் போயுள்ளது. இதை மீட்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், பந்தநல்லூரை சேர்ந்த ராஜகோபால் வெங்கட்ராமன் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் ராஜகோபால் வெங்கட்ராமன், சிலைக்கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. கடந்த ஆட்சியில் இந்த வழக்கில் அறநிலையத்துறை தாக்கல் செய்த அறிக்கையில், சிலைகள், நகைகள் காணாமல் போகவில்லை என கூறி, திருட்டுகள் மறைக்கப்பட்டது.

தற்போது, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஆவணங்கள், சிலைகள், நகைகள் மாயமானது குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், மனுதாரர் சில தீவிரமான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். கோவில் சிலைகள், நகைகள் எங்கிருந்து காணாமல் போயின? என்பதை கண்டறிய வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்காமல் தடுக்கும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும் என்று ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே, இந்து சமய அறநிலையத்துறை ஏற்கனவே தாக்கல் செய்த பதில் மனுவில் எடுத்துள்ள நிலைபாட்டை மறுபரிசீலனை செய்து புதிய அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். புராதன கோவில்களை பாதுகாக்க வேண்டும். காணாமல் போன சிலைகள், நகைகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com