முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி: மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

தமிழகத்தில் முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி: மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
Published on

சென்னை,

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 85 சதவீதத்துக்கும் மேல் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். மேலும் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் 2-வது தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களில் 18 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியா முழுவதும் பூஸ்டர் டோஸ் எனப்படும் 3-வது தவணை தடுப்பூசி போடும் பணிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் 2 தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

10 லட்சத்து 75 ஆயிரம் பேர்

அந்தவகையில் தமிழகத்தில் முதற்கட்டமாக 2-வது தவணை தடுப்பூசி போட்டு 273 நாட்கள் (கடந்த ஆண்டு ஜனவரி 16-ந்தேதி முதல் மே 3-ந்தேதி வரை) முடிந்தவர்களில் முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் உடையவர்கள் என 10 லட்சத்து 75 ஆயிரத்து 351 பேர் கண்டறியப்பட்டு உள்ளனர். இவர்கள் வரும் 31-ந்தேதிக்குள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட தகுதியானவர்கள் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் உடையவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடும் பணி தொடங்குகிறது. சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள இமேஜ் கலையரங்கத்தில் இந்த பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com