

சென்னை,
தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று தனது கொளத்தூர் தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை தொடங்கி வைத்து, நல உதவிகளை வழங்கினார். ரெங்கசாயி தெருவில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில் மாநகராட்சி மூலதன நிதி ரூ.15.31 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ. அலுவலகத்தில், மக்களைத் தேடி மருத்துவம் என்ற பெயரில் ஏழை, எளிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடமாடும் மருத்துவ சேவையை அவர் தொடங்கிவைத்தார்.
மேலும், ஜெகநாதன் தெருவில், மின்சார உதவி பொறியாளர் புதிய அலுவலக அறை கட்டும் பணிக்கும், உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிக்கும், பார்த்தசாரதி தெருவில் விளையாட்டு திடலை மேம்படுத்தும் பணிக்கும் அடிக்கல் நாட்டினார்.
இதுதவிர போதகர்கள் 60 பேருக்கு புத்தாடை மற்றும் உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார்.