ரூ.35.45 கோடியில் முன்னாள் படைவீரர்கள் தங்கும் விடுதி மற்றும் பயிற்சி மையக் கட்டிடம் - அடிக்கல் நாட்டினார் மு.க.ஸ்டாலின்

செங்கல்பட்டு மாவட்டம், புனித தோமையார் மலையில் இந்த இரண்டு கட்டிடங்களும் அமைய உள்ளன.
ரூ.35.45 கோடியில் முன்னாள் படைவீரர்கள் தங்கும் விடுதி மற்றும் பயிற்சி மையக் கட்டிடம் - அடிக்கல் நாட்டினார் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் 11.3.2026 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் வசதிக்காக செங்கல்பட்டு மாவட்டம், புனித தோமையார் மலையில் 59,600 சதுர அடி பரப்பளவில் 35 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உள் கட்டமைப்புடன் கூடிய முன்னாள் படைவீரர்கள் தங்கும் விடுதி மற்றும் பயிற்சி மையக் கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் 15.08.2025 அன்று ஆற்றிய சுதந்திர தின விழா உரையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் வசதிக்காக சென்னையில் உள்கட்டமைப்புடன் கூடிய முன்னாள் படை வீரர்கள் தங்கும் விடுதி கட்டப்படும் என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பினை தொடர்ந்து, தமிழ்நாட்டைச் சார்ந்த சுமார் 1,84,000 முன்னாள் படைவீரர்களில் 5,000-க்கு மேற்பட்டோர் சென்னையில் பணிபுரிவதை கருத்திற்கொண்டும், தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழகம் மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் சென்னையில் பணிபுரியும் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வருகை தரும் முன்னாள் படைவீரர்கள் தங்கி பயனடையும் வகையிலும் செங்கல்பட்டு மாவட்டம், புனித தோமையார் மலையில் 35 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 59,600 சதுர அடி பரப்பில் தரை (Stilt Floor) மற்றும் மூன்று மேல்தளங்களுடன் கட்டப்படவுள்ள முன்னாள் படைவீரர் விடுதி மற்றும் பயிற்சி மையத்திற்கு முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

இவ்விடுதிக் கட்டிடம் மொத்தம் 80 அறைகள் மற்றும் 216 படுக்கை வசதிகளுடன், அலுவலகம், பல்நோக்கு அறை, உடற்பயிற்சிக் கூடம் மற்றும் கூட்ட அரங்கம் ஆகியவற்றுடன் மூன்று மின்தூக்கிகள், வாகனங்கள் நிறுத்தும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தால் கட்டப்பட இருக்கிறது. சென்னையில் முன்னாள் படைவீரர்களுக்கு தங்கும் விடுதி கட்டுவதன் மூலம் இங்கு தங்கி பணிபுரியும் முன்னாள் படைவீரர்களும் மற்றும் அலுவல் நிமித்தமாக பல்வேறு மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வரும் முன்னாள் படைவீரர்களும் பயனடைவார்கள்

இந்த நிகழ்ச்சியில், மனிதவள மேலாண்மைத்துறை மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், பொதுத்துறை முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், அரசு கூடுதல் செயலாளர் மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை இயக்குநர் கி.பாலசுப்பிரமணியம், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. வினித்தேவ் வான்கேடே, இ.கா.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com