70 வயது பூர்த்தியடைந்த 500 தம்பதியினருக்கு புத்தாடைகள், மங்கல பொருட்கள்: மு.க.ஸ்டாலின் வழங்கினார்

தமிழ்நாடு முழுவதும் 70 வயது பூர்த்தியடைந்த 3,000 மூத்த தம்பதியினருக்கு இன்று புத்தாடைகள், மங்கல பொருட்கள் வழங்கப்பட்டது.
70 வயது பூர்த்தியடைந்த 500 தம்பதியினருக்கு புத்தாடைகள், மங்கல பொருட்கள்: மு.க.ஸ்டாலின் வழங்கினார்
Published on

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, வேப்பேரி, பி.கே.என். ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற விழாவில், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுபாட்டிலுள்ள சென்னை மண்டல கோவில்கள் சார்பில் 70 வயது பூர்த்தியடைந்த 500 மூத்த தம்பதியினருக்கு புத்தாடைகள், பழ வகைகள் மற்றும் மங்கலப் பொருட்களை வழங்கி சிறப்பு செய்தார்.

இந்து சமய அறநிலையத்துறையானது கோவில்களின் மேம்பாட்டிற்கும், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்கிடும் வகையிலும் பல்வேறு முனைப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கோவில்கள் சார்பில் கல்வி நிறுவனங்கள், பயிற்சிப் பள்ளிகள், மூத்த குடிமக்கள் உறைவிடங்கள், கருணை இல்லங்கள் நடத்தப்பட்டு வருவதோடு, பொருளாதாரத்தில் பின்தங்கிய 2,800 இணைகளுக்கும், 165 மாற்றுத்திறனாளி இணைகளுக்கும் 4 கிராம் தங்கத்தாலி மற்றும் சீர்வரிசைப் பொருட்களுடன் கட்டணமில்லாமல் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன.

2025-2026-ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில், “கோவில்கள் சார்பில் 70 வயது பூர்த்தியடைந்த 2,000 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யப்படும்” என அறிவிக்கப்பட்டதை நிறைவேற்றிடும் வகையில், தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 10.11.2025 அன்று திருவல்லிக்கேணியில் 200 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்தததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் கோவில்கள் சார்பில் 2,000 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக கோவில்கள் சார்பில் 20,000 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்திடும் வகையில் சென்னை, வேப்பேரி, பி.கே.என். ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் 70 வயது பூர்த்தியடைந்த 500 மூத்த தம்பதியினருக்கு வேட்டி மற்றும் சட்டை, புடவை, ரவிக்கை, பழ வகைகள், மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல்கள், குங்குமசிமிழ் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை வழங்கி சிறப்பு செய்து, தொடங்கி வைத்தார். இன்றைய தினம் இதேபோல் தமிழ்நாடு முழுவதும் 3,000 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யப்பட்டது.

இந்த விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞானபாலய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் அப்பன் உலகாரிய ராமனுஜ எம்பார் சுவாமிகள், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், தாயகம் கவி, வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் முனைவர் துரை.ரவிச்சந்திரன், இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் குழு உறுப்பினர் சுகி சிவம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com