வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க பயணம்: ஜெர்மனி, இங்கிலாந்துக்கு இன்று புறப்படுகிறார் மு.க.ஸ்டாலின்

வெளிநாட்டு தொழில் முதலீடுகளை திரட்டுவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
சென்னை,
தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கவும், வெளிநாடுவாழ் தமிழர்களை சந்திக்கவும் ஜெர்மனி, இங்கிலாந்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் 7 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். சென்னையில் இருந்து விமானத்தில் அவர் இன்று காலை புறப்படுகிறார்.
முன்னதாக தமிழக பொருளாதாரம் 2030-ம் ஆண்டில் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.88 லட்சம் கோடி) அளவுக்கு உயர்த்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, தொழில்துறை கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்காக, உலக முதலீட்டாளர்கள் மாநாடு, முதலீட்டாளர் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதோடு நிற்காமல், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் அவ்வப்போது வெளிநாடுகளுக்குச் சென்று முதலீட்டாளர்கள் கூட்டத்தை நடத்தி, தமிழகத்தில் தொழில் முதலீடுகளை செய்யும்படி தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார்.
அந்த வகையில், இதுவரை 4 வெளிநாட்டு பயணங்களை முதல்-அமைச்சர் மேற்கொண்டுள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம், துபாய், ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்றபோது ரூ.6,100 கோடி தொழில் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், அதே ஆண்டில் சிங்கப்பூர், ஜப்பானில் ரூ.1,342 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
2024-ம் ஆண்டு தொடக்கத்தில் ஸ்பெயினில் ரூ.3,440 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், அதே ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பரில் அமெரிக்காவில் ரூ.7,616 கோடி முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இருந்தன.
அதன் தொடர்ச்சியாக, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு சென்று தொழில் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
தற்போது முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயண விவரம் நேற்று வெளியானது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து ஜெர்மனி புறப்படுகிறார். இன்று இரவு 9 மணி அளவில் ஜெர்மனி சென்றடைகிறார்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஜெர்மனியில் தி.மு.க. அயலக அணி நிர்வாகிகள், முதல்-அமைச்சரை சந்திக்கின்றனர். வருகிற 1-ந் தேதியன்று ஜெர்மனியில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டு செல்கிறார்.
2-ந் தேதியன்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தொழில்முனைவோரை சந்தித்து உரையாடுகின்றார்.
3-ந் தேதி லண்டனில் உள்ள தொழில் அதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுப்பார். 4-ந் தேதி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அயலக தமிழர் நல வாரியம் சார்பில் நடத்தப்படும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அங்கு பெரியாரின் உருவப்படத்தை திறந்து வைக்கிறார்.
6-ம் தேதி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், லண்டனில் உள்ள தமிழர் நல வாரியத்தின் நிகழ்வுகளில் பங்கேற்கிறார். 7-ந் தேதியன்று லண்டனில் இருந்து சென்னைக்கு புறப்படுகிறார். செப்டம்பர் 8-ந் தேதி அதிகாலை அவர் சென்னையை வந்தடைகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த வெளிநாட்டு சுற்றுப் பயணத்திலும் பல்லாயிரம் கோடி ரூபாய்க்கான முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சுற்றுப் பயணத்தில் முதல்-அமைச்சருடன், முதல்-அமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அதிகாரிகள் உடன் செல்கின்றனர். இன்று (சனிக்கிழமை) காலையில் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து தனது பயணத் திட்டத்தின் முழு விவரத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்.






