

சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக இன்று (செவ்வாய்கிழமை) கன்னியாகுமரி செல்கிறார். இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்படும் அவர், காலை 11.25 மணிக்கு தூத்துக்குடி வந்தடைகிறார். அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மதியம் 1 மணிக்கு கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நினைவு வளைவை திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து, கன்னியாகுமரியில் உள்ள பொதுப்பணித் துறை விருந்தினர் இல்லத்திற்கு சென்று தங்குகிறார். பின்னர், மாலை அங்கிருந்து புறப்பட்டு சென்று கல்லடிவிளையில் கருணாநிதி சிலை மற்றும் கலைஞர் படிப்பகம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார். இரவு 7 மணிக்கு நாகர்கோவில் வெப்பமூடு பூங்காவில் பொன்னப்ப நாடார் சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார்.
பின்னர், இரவு 7.20 மணிக்கு அங்கிருந்து புறப்படும் அவர் நாகர்கோவில் விருந்தினர் இல்லத்திற்கு வந்து தங்குகிறார். நாளை (25-ந் தேதி, புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு நாகர்கோவிலில் உள்ள கான்கோர்டியா பள்ளியில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்டங்களை வழங்குகிறார்.
காலை 10.30 மணிக்கு பள்ளியில் இருந்து காரில் புறப்படும் அவர், மதியம் 12.30 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார். பின்னர் அங்கிருந்து மதியம் 1.25 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டு மதியம் 3.20 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார். பின்னர், அங்கிருந்து ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள இல்லத்திற்கு அவர் செல்கிறார்.