

கடலூர்,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி பரங்கிப்பேட்டை அடுத்த சி.புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (60 வயது). திமுக தொண்டரான இவர் பரங்கிப்பேட்டை கோர்ட்டில் உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.
திமுக விசுவாசியான ஆறுமுகம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்ததை நினைத்து கடும் மனவிரக்தியில் இருந்து வந்தார். இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் தேர்தலில் தோல்வியடைந்ததை தாங்கிக்கொள்ள முடியாத ஆறுமுகம் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சில்வஸ்டார் (70 வயது). இவர், மாநகராட்சி 26-வது வார்டு திமுக அவைத்தலைவராக இருந்தார். கடந்த 4-ந்தேதி தேர்தல் முடிவை டி.வி.யில் பார்த்தபோது மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்ததை கண்டு சில்வஸ்டார் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனை கவனித்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அப்போது, உடன் இருந்து கவனித்து வந்தவர்களிடம் சில்வஸ்டார், தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனக்கூறி புலம்பி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அதிகாலை சில்வஸ்டாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.