மீனவர்களை விடுவிக்கக்கோரி வெளியுறவு மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
மீனவர்களை விடுவிக்கக்கோரி வெளியுறவு மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
Published on

சென்னை,

நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களிடமிருந்து ஒரு விசைப்படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காரைநகரில் கைது செய்யப்பட்ட மீனவர்களை, இலங்கை கடற்படை காங்கேசன்துறை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது;

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 இந்திய மீனவர்களையும் அவர்களது மீன்பிடி விசைப்படகையும் இலங்கைக் கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளதை மத்திய வெளியுறவுத் துறை மந்திரியின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். கைது செய்யப்பட்ட 10 மீனவர்களில், 6 மீனவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் (5 பேர் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒருவர் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்)

மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு மீன்பிடித் தொழிலை மட்டுமே பெரிதும் நம்பியுள்ளதை வெளியுறவு மந்திரி அறிவார். இலங்கைக் கடற்படையினர் இதுபோன்று மீனவர்களைச் சிறைபிடிப்பதால், அவர்களது குடும்பத்தினர் மிகுந்த துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 102 மீனவர்களும், 210 மீன்பிடி படகுகளும் இலங்கை வசம் உள்ளது.

எனவே, உரிய தூதரக வழிமுறைகளை முன்னெடுத்து, இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கரை கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com