கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை - முதல்-அமைச்சர் வழங்கினார்
வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு மொத்தம் 1 கோடியே 90 லட்சம் ரூபாய் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
சென்னை,
மாலத்தீவில் நடைபெற்ற 7-வது கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகைக்கான காசோலைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (15.12.2025) தலைமைச் செயலகத்தில், மாலத்தீவில் நடைபெற்ற 7-வது கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கி வாழ்த்தினார். மேலும், சென்னையில் நடைபெற்ற SDAT ஸ்குவாஷ் உலகக் கோப்பை 2025 போட்டியில் வெற்றி பெற்றவர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றதோடு, டெல்லியில் நடைபெற்ற 3-வது CII Sports Business Awards 2025 விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு வழங்கப்பட்ட விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலத்திற்கான விருதினையும் காண்பித்து, வாழ்த்து பெற்றனர்.
விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.
மாலத்தீவில் 2.12.2025 முதல் 6.12.2025 வரை நடைபெற்ற 7-வது கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த கீர்த்தனா, காசிமா, மித்ரா ஆகியோர் பதக்கங்கள் வென்றனர். கீர்த்தனாவுக்கு 1 கோடி ரூபாயும், காசிமாவுக்கு 50 லட்சம் ரூபாயும், மித்ராவுக்கு 40 லட்சம் ரூபாய் என மொத்தம் 1 கோடியே 90 லட்சம் ரூபாய் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதைத் தொடர்ந்து, கீர்த்தனா மற்றும் காசிமா ஆகியோருக்கு உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலைகளை முதல்-அமைச்சர் இன்றையதினம் வழங்கி, வாழ்த்தி அடுத்தடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெற்று நாட்டிற்கு மென்மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியின் சார்பில் 9.12.2025 முதல் 14.12.2025 வரை சென்னையில் நடைபெற்ற SDAT ஸ்குவாஷ் உலகக் கோப்பை 2025 போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் - ஜோஷ்னா சின்னப்பா, அபே சிங், அனஹத் சிங், வேலவன் செந்தில்குமார், ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் இயக்குநர் தசைரஸ் போன்சா மற்றும் பயிற்றுநர்கள் ஹரிந்தர் பால் சிங், ஆலன் சோய்சா ஆகியோர் முதல்-அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
டெல்லியில் 9.12.2025 அன்று நடைபெற்ற 3-வது CII Sports Business Awards 2025-இல் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு வழங்கப்பட்ட விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலத்திற்கான (THE BEST STATE PROMOTING SPORTS DEVELOPMENT AWARD) விருதினை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
இந்நிகழ்வின்போது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, விளையாட்டு வீரர்களின் பெற்றோர்கள் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர் உடனிருந்தனர்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








