

சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதி மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வெப்பநிலை அதிகபட்சம் 30 டிகிரி, குறைந்தபட்சம் 21 டிகிரி செல்சியஸ் அளவிற்கு பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் குமரிக்கடல், மன்னார்வளைகுடா, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.