மோடி அரசு கூட்டாட்சி தத்துவத்தை கேள்விக்குறியாக மாற்றி உள்ளது - காங்கிரஸ் தலைவர் அழகிரி பேட்டி

மோடி அரசு கூட்டாட்சி தத்துவத்தை கேள்விக்குறியாக மாற்றி உள்ளது என காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்தார்.
மோடி அரசு கூட்டாட்சி தத்துவத்தை கேள்விக்குறியாக மாற்றி உள்ளது - காங்கிரஸ் தலைவர் அழகிரி பேட்டி
Published on

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி மாநில நிர்வாகிகளுடன் வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு கையாளுவது?, எப்படி எதிர்கொள்வது? என கலந்தாலோசிப்பது நல்ல முயற்சி. இந்த முயற்சி நல்ல பலனை தரும் என எதிர்பார்க்கிறோம். கடந்த தேர்தலைவிட கூடுதல் சீட்டுகளை நிச்சயமாக கேட்போம்.

மோடி அரசாங்கம் கடந்த 9 ஆண்டுகளாக தமிழகத்துக்கு எந்த திட்டத்தையும் வழங்கவில்லை. கூட்டாட்சி தத்துவத்தில் அது முறை கிடையாது. 9 சதவீதத்துக்கு மேல் மத்திய வரியை செலுத்துகிறோம். ஆனால் 2 சதவீதத்துக்கும் குறைவாகதான் உதவி செய்கின்றனர். இதில் கூட்டாட்சி என்று பேசுவதற்கு பொருள் இல்லை.

எல்லா மாநிலங்களுக்கும் எந்த விகிதாச்சார அடிப்படையில் நிதி வழங்கப்படுகிறதோ அதுபோல் தமிழகத்துக்கும் வழங்க வேண்டும். ஆனால் 9 ஆண்டுகளில் உத்தரபிரதேசத்துக்கு மட்டும் 10 எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகள் தந்து உள்ளார். தமிழகத்துக்கு ஒன்று கூட தரப்படவில்லை.

தமிழகத்தில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப மத்திய அரசுக்கு கட்டுகின்ற வரிக்கு ஏற்ப சாலைகளை வழங்கி இருக்க வேண்டும். துறைமுகங்களை எதையும் நவீனப்படுத்த வில்லை. இதன் மூலம் கூட்டாட்சி தத்துவத்தை கேள்விக்குறியாக மோடி அரசு மாற்றி உள்ளது. இது சம்பந்தமாக விவாதிக்கப்படும்.

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக உள்ள அரசியல் கட்சிகளை உடைப்பது, உடைக்க முடியாத கட்சிகளுக்கு தொந்தரவு தருவது போன்ற வேலைகளை பா.ஜ.க. அரசு செய்து வருகிறது. மராட்டியத்தில் சிவசேனா, சரத்பவார் கட்சிகளை இரண்டாக உடைத்து உள்ளனர். தி.மு.க.வை உடைக்க முடியாததால் அரசுக்கு தொந்தரவு தருகின்றனர்.

இந்தியா கூட்டணி கட்சிகளின் முதல் 2 கூட்டங்களை விட 3-வது கூட்டத்தின் போது அதிக பலன் கிடைக்கும்.

தேசிய அளவில் காங்கிரஸ்- பா.ஜ.க. என போட்டி போடுகிறது. தமிழகத்தில் தி.மு.க.-அ.தி.மு.க. என இருக்கிறது. இந்த 2 கட்சிகளில் ஏதாவது ஒன்றை தான் மக்கள் தேர்ந்து எடுக்க முடியும். ஆனால் தி.மு.க.-காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போடுவது தவறு என்றால் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணிக்கு சீமான் ஓட்டு போட சொல்கிறாரா?. பூனை குட்டி வெளியே வந்து விட்டது. தான் யார் என்பதை சீமான் காட்டி விட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com