பிரதமர் பதவியிலிருந்து மோடி விலக வேண்டும்- தொல். திருமாவளவன் அறிக்கை

பெகாசஸ் விவகாரத்தில் தேசத்துரோகக் குற்றமிழைத்த மோடி பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என தொல். திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பிரதமர் பதவியிலிருந்து மோடி விலக வேண்டும்- தொல். திருமாவளவன் அறிக்கை
Published on

சென்னை,

பெகாசஸ் விவகாரத்தில் தேசத்துரோகக் குற்றமிழைத்த மோடி பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என தொல். திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இஸ்ரேல் நாட்டிடமிருந்து பெகாசஸ் உளவுச் செயலியை மோடி அரசு வாங்கியது உண்மை என்பதை 'நியு யார்க் டைம்ஸ்' நாளேடு ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தியுள்ளது. உளவுச் செயலியை வாங்கவில்லை என்று நாடாளுமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் பொய்யுரைத்த மோடி அரசு தேசத்துரோகக் குற்றம் இழைத்துள்ளது. இதற்குப் பொறுப்பேற்று பிரதமர் பதவியிலிருந்து மோடி விலக வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ நிறுவனம் 10 போன்களை உளவு பார்ப்பதற்கான பெகாசஸ் உளவுச் செயலிக்கு 7 லட்சம் அமெரிக்க டாலர் விலை நிர்ணயித்துள்ளது. (அதாவது 5கோடியே 25 லட்சம் ரூபாய்) மோடி அரசு சுமார் 300 கோடி ரூபாய்க்கு இந்த உளவுச் செயலிகளை வாங்கியிருக்கிறது.

அதன்மூலம் சுமார் 600 போன்களை அது உளவு பார்த்துள்ளது எனத் தெரியவந்துள்ளது . மோடி அரசு மக்களின் வரிப்பணத்திலிருந்து 300 கோடி ரூபாயை தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் என்ற அமைப்பின் மூலமாக இஸ்ரேலுக்கு அனுப்பி இருப்பது நிரூபணமாகியுள்ளது.இதற்கெல்லாம் பிரதமர் மோடியே பொறுப்பு ஏற்க வேண்டும்.

எனவே நரேந்திர மோடி உடனடியாகப் பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். நீட் விலக்கு மசோதாவைக் கிடப்பில் போட்டிருப்பதையும் உளவுச் செயலி, பெகாசஸ் மோசடியையும் கண்டிக்கிற வகையில் குடியரசுத் தலைவர் உரையை விசிக புறக்கணிக்கிறது இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com