பெண்ணிடம் அத்துமீறல்: விசிக நிர்வாகி மகன் உள்பட 3 பேர் கைது - போலீஸ் நிலையம் முற்றுகை

கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், ஆதரவாளர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சின்னக்குளம் பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பொங்கல் விழாவில் 20 வயது இளம்பெண்ணிடம் ஈரோடு வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் மகன் நிஷாந்த் மற்றும் அவருடைய நண்பர்களான தீனதயாளன், சுரேஷ் ஆகியோர் அத்துமீறியதாகவும் இதனை தட்டிக்கேட்ட உறவினர்களை தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட இளம்பெண் அந்தியூர் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து நேற்று முன்தினம் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை கண்டித்து இவர்களின் உறவினர்கள், ஆதரவாளர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் பவானி டிஎஸ்பி ரத்தினகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து வாலிபர்கள் தரப்பில் கொடுத்த புகாரின் பேரில் எதிர் தரப்பை சேர்ந்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.






