

வண்டலூர்,
கூடுவாஞ்சேரியில் 2 சிறுவர்களை கடித்த குரங்கை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் 2-வது தெருவில், நேற்று காலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுவர்களை அப்பகுதியில் சுற்றித்திரிந்த குரங்கு திடீரென கடித்துக் குதறியது. இதில் சிறுவர்கள் காயம் அடைந்தனர். இதையடுத்து, சிறுவர்களை அவர்களது பெற்றோர், அருகில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுகுறித்து அப்பகுதி நகராட்சி கவுன்சிலர் கவுசல்யா பிரகாஷ், வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். குரங்கை பிடிப்பதற்காக அப்பகுதியில் கூண்டு வைக்கப்பட்டு, அதற்குள் வாழைப்பழத்தை வைத்து குரங்கை பிடிக்க வனத்துறை ஊழியர்கள் முயற்சி மேற்கொண்டனர். அந்த குரங்கு அங்கிருந்து திடீரென மாயமானது. தொடர்ந்து குரங்கை பிடிக்க அப்பகுதியில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நந்திவரம் பகுதியில் உள்ள புதுப்பாளையத்தம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த 5 பக்தர்களை குரங்கு கடித்துக் குதறியது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு நந்திவரம் அங்கன்வாடி மையம் அருகே தெருவில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள் மற்றும் தெருவில் விளையாடி கொண்டிருந்த சிறுவர்களை குரங்கு கடித்தது.
இந்த நிலையில், மீண்டும் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பகுதிகளில் குரங்குகள் சுற்றித்திரிந்து குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் பெரியவர்களை கடித்து அட்டகாசம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, "தெருக்களில் சுற்றித்திரியும் குரங்குகளுக்கு பொதுமக்கள் உணவு மற்றும் தின்பண்டங்களை வழங்கக்கூடாது. குரங்குகளுக்கு தொடர்ந்து உணவு வழங்கினால், அந்தப் பகுதியில் உணவு கிடைக்கும் என்ற எண்ணத்தில் அவை மீண்டும் மீண்டும் அங்கு வரத் தொடங்கும். ஒரு கட்டத்தில் உணவு கிடைக்காதபோது, பொதுமக்களை அச்சுறுத்துவதுடன், கடிக்கவும் தொடங்குகின்றன. எனவே, குரங்குகளுக்கு உணவு வழங்குவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்" என்று கூறினார்.