

சென்னை,
மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில், சென்னையில் தொடர்ந்து மழை இருப்பதாக தெரிவித்துள்ள இந்திய வானிலை மைய அறிவிப்பின்படி முன்னெச்சரிக்கைப் பணிகள் மேற்கொள்ளுதல் தொடர்பாக அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
இன்று (18.09.2026) மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில், சென்னையில் தொடர்ந்து மழை இருப்பதாக தெரிவித்துள்ள இந்திய வானிலை மைய அறிவிப்பின்படி முன்னெச்சரிக்கைப் பணிகள் மேற்கொள்ளுதல் தொடர்பாக அலுவலர்களுடனான ஆலோசணைக் கூட்டம் ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் பேசும்போது தெரிவித்ததாவது:
சென்னையில் தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை இருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. எனவே, மாநகராட்சி அலுவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பணியாளர்களை தயார் நிலையில் வைத்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து சுரங்கப்பாதைகளிலும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மக்களுக்கு இடையூறின்றி போக்குவரத்து சீராகச் செல்லும் வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மழையினால் விழும் மரங்கள் மற்றும் மரக்கிளைகள் அகற்றுவதற்கான வாகனங்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை தயார் நிலையில் வைத்திட வேண்டும். மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மழைநீர் தேங்கும் பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மோட்டார் பம்புகளை தயார் நிலையில் வைத்து தேங்கும் மழைநீரை உடனடியாக அகற்றிட வேண்டும். நிவாரண மையங்கள் மற்றும் சமையல் கூடங்களை தயார் நிலையில் வைத்திட வேண்டும். பணியாளர்களை சுழற்சி முறையில் நியமித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். பொது மக்களிடம் இருந்து வரப்பெறும் புகார்கள் மீது உரிய நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ள வேண்டும் என ஆணையாளர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் இணை ஆணையாளர் (கல்வி) க.கற்பகம், துணை ஆணையாளர் (வருவாய் (ம) நிதி) சித்ரா விஜயன், காணொலிக் காட்சியின் வாயிலாக வட்டார துணை ஆணையாளர்கள் ஸ்வேதா சுமன், (வடக்கு), எச்.ஆர்.கவுஷிக், (மத்தியம்), அதாப் ரசூல், (தெற்கு) மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.