தென் மாவட்டங்களில் தீவிரமடையும் பருவமழை: நெற்பயிர்கள் சேதம்

தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
தென் மாவட்டங்களில் தீவிரமடையும் பருவமழை: நெற்பயிர்கள் சேதம்
Published on

தஞ்சை,

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அந்த வகையில் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடந்த சில வராமாகவே மழையானது வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி காணப்பட்டன. அம்மாப்பேட்டை, சாலியமங்கலம் பகுதிகளில் மழை நீர் தேங்கி பயிர்கள் மூழ்கிய நிலையில் கொல்லாங்கரை பகுதியிலும் மழைநீர் வயல்களில் தேங்கியதால் இளம் பயிர்கள் நீரில் மூழ்கி காணப்பட்டன. கொல்லாங்கரை பகுதியில் மட்டும் ஏராளமான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளதால் வேளாண் அதிகாரிகள் அங்கு பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தளிகைகுளம் பாவன விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதேபோல, திருவாரூர் மாவட்டம் மாங்குடி, குறிச்சி மூலை, சோலைக்குளம் உள்ளிட்ட இடங்களில் பயிரிடப்பட்ட குறுவை நெற்பயிர் அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்த பகுதியில் தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 300 ஏக்கர் பரப்பளவுக்கு மேலான நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தென் மாவட்டங்களில் பல பகுதிகளில் கனமழையால் நெற்பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.   

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com