

சென்னை,
கோடம்பாக்கம் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர்.கவுஷிக் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, கோடம்பாக்கம் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர்.கவுஷிக் இன்று (14.08.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மத்திய வட்டார துணை ஆணையாளர், கோடம்பாக்கம் மண்டலம்,வார்டு-129க்குப்பட்ட வடபழனி மாநகரப் போக்குவரத்து கழக பேருந்து பணிமனை மற்றும் வார்டு-128க்குட்பட்ட கே.கே.நகர், வேம்புலியம்மன் கோயில் தெருவில் உள்ள காலி இடம் ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மழைநீர் தேங்காமல் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
தொடர்ந்து, வார்டு-136க்குட்பட்ட டாக்டர் ராமசாமி சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். கால்வாயின் ஆரம்பிக்கும் இடத்தில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளவும், பி.டி.ராஜன் சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுகளின்போது, மண்டல அலுவலர் ஆர்.புருஷோத்தமன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.