மொபட்டுகள், லாரி அடுத்தடுத்து மோதி விபத்து; மீனவர் பலி

தூத்துக்குடி அருகே 2 மொபட்டுகள், லாரி ஆகியவை அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் மீனவர் உடல்நசுங்கி பரிதாபமாக பலியானார்.
Published on

தூத்துக்குடி அருகே 2 மொபட்டுகள், லாரி ஆகியவை அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் மீனவர் உடல்நசுங்கி பரிதாபமாக பலியானார்.

மீனவர்

தூத்துக்குடி தருவைகுளத்தை சேர்ந்தவர் அந்தோணி மரிய மிக்கேல் (வயது 58). மீனவர். சம்பவத்தன்று இவர் மொபட்டில் தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டு இருந்தார். அவர் சேதுபாதை ரோட்டில் வந்த போது, எதிரே அந்தோணி துரை என்பவர் மற்றொரு மொபட்டில் வந்து கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக இரண்டு மொபட்டுகளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இருவரும் மொபட்டுகளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் அந்தோணி மரிய மிக்கேல் ரோட்டில் விழுந்து உள்ளார். பலத்த காயங்களுடன் கிடந்த அவர் எழுந்திரிக்க முயற்சித்துள்ளார்.

உடல் நசுங்கி சாவு

அப்போது பின்னால் விளாத்திகுளம் பூசனூரை சேர்ந்த முனியசாமி என்பவர் லாரியை ஓட்டிவந்துள்ளார். திடீரென ரோட்டில் விழுந்த அந்தோணி மரிய மிக்கேல் உடல் மீது எதிர்பாராத விதமாக லாரி ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அந்தோணி மரிய மிக்கேல் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com